திருமண விழாவுக்குச்
செல்பவர்கள் புதுமணத் தம்பதிகளைப் பார்த்து,
'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
சேர்ந்தே நன்கு வாழவேண்டும்', 'எப்போதும் இணைபிரியாமல் சந்தோஷமாக
வாழவேண்டும்' என வாழ்த்துவார்கள்.
திருமணத்திற்குமுன்
நட்சத்திரப் பொருத்தம், தோஷ சாம்யம், ஜாதகப் பொருத்தம் எல்லாம் பார்த்துதான்
திருமணம் முடிவாகி நடக்கிறது.
ஆயினும் இந்த ஜோடிகள்
மிக ஒற்றுமையாக, எப்போதும் மகிழ்ச்சித்துள்ளலுடன் இருக்கிறார்களா என்றால், எல்லாம் ஒரு மூன்று மாதங்களுக்குதான். பிறகு,
அவர்களும் சம்சார சாகரம் எனும் பெரும் வளையத்துக்குள் அகப்பட்டுக்கொண்டு,
இது சரியில்லை- அது சரியில்லையென்று மூக்கை சிந்துகிறார்கள்.
இது ஏன்?
ஜோதிடம் திருமணம்
என்ற பந்தத்தைக் குறிக்க ஏழாமிடத்தைக் குறிகாட்டுகிறது. ஏழாமிடம் என்பது லக்னத்துக்கு
நேர் எதிரான இடம். அதாவது உங்களுக்கு நேர் எதிர்த்தன்மை கொண்டவர்தான்
உங்கள் இல்வாழ்க்கைத் துணைவர் என்று ஜோதிடம் உறுதியாகக் கூறுகிறது. நம்முடைய 'ஆப்போசிட் பார்ட்டி தான் நமக்குப் பக்கத்தில்
வந்து, நிற்கப் போகிறது என்று ஜோதிடம் கூறி விட்டது. இது புரியாமல், கல்யாணமானபிறகு புலம்பி என்ன பயன்?
எனவே, திருமணம் என்ற ஒரு சம்பவம்
நடக்கும்போது, நேரெதிர் ஜாதகரை வைத்துக் காலம் கழிக்கப்போகிறோம்
என்றுணர்ந்து மனதளவில் தயாராக வேண்டியது அவசியம்.
இவ்வாறு மனம் சமநிலை
பெற்றுவிட்டால், திருமண வாழ்க்கை ஓஹோதான். இந்த இடத்தில் ஒன்று தோன்றும்.
'நாங்க என்ன சந்நியாசமா வாங்கப்போறோம்?' என்று
நினைக்கலாம். சந்நியாச வாழ்க்கையெல்லாம் ரொம்ப சுலபம்.
கல்யாண வாழ்க்கைதான் சிரமம். அனுபவித்தவர்களுக்குப்
புரியும்.
இப்படி மனம் அதிகம்
எதிர்பார்க்காமல் இருந்தால் திருமண வாழ்க்கை எவ்வித சச்சரவுமின்றி மென்மையாக ஓடும்.
இதுபோல, லக்னம் தவிர, மற்ற பாவங்களை என்னவிதமாகக் கையாளவேண்டும் என்று பார்க்கலாம். 12 பாவங்களும் இணைந்ததுதானே வாழ்க்கை
இரண்டாம் பாவகம்
இரண்டாம் பாவகத்துக்கென்று இருநூறு காரகப் பலன்கள் உண்டு. ஆனால் திருமணமென்று வரும்போது அத்திருமணம் மனநெரிசலின்றிச் செல்ல இரண்டாம் பாவகநிலை என்ன? திருமணப் பிரச்சினைகள் வர முதல் காரணமே பேச்சு பேச்சு பேச்சுத்தான். (பேசிப்பேசியே நிச்சயத்துடன் நின்ற கல்யாணங்கள் உண்டு).
ஆக, இந்த 2-ஆமிடத்தை வைத்து, இந்த தம்பதிகள் நிதானமாகப் பேச வேண்டும் என்று அறிவுறுத்தப்பட வேண்டும்.
அடுத்து பணவிஷயம். சில மனைவிகள், 'இவன் என்னைவிட குறைந்த சம்பளம் வாங்குகிறான்' என்றோ, சில கணவர்கள் 'மனைவி வழியில் வரும்படி வரவில்லை' என்றோ மனச்சுணக்கம் கொள்கின்றனர். இதையெல்லாம் வீட்டின் பெரியவர்களோ அல்லது சம்பந்தப்பட்ட தம்பதிகளோ சேர்ந்துபேசி, முதலிலேயே தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம். இதனால் மணவாழ்வு சீராகச் செல்லும்.
இரண்டாமிடத்தில் அசுபத்தன்மையோடு அமைந்த கிரகப் பலன்கள்
சூரியன் கோபமான வார்த்தைகள்.
சந்திரன் எளிதில் திருப்தியடையாதவர்.
செவ்வாய் மடத்தனம், மட்டமான பேச்சு.
புதன் கோமாளித்தனமான பேச்சு.
சுக்கிரன் செல்வக்குறைவு.
குரு முட்டாள், குறைவான வசதிவாய்ப்பு.
சனி கஞ்சத்தனம், பிறர் செல்வத்துக்கு ஆசை.
ராகு வெளிநாட்டுப்பணம், எதிர்மறை சிந்தனை, குதர்க்கமான பேச்சு.
கேது சந்தேகப் பேச்சு.
மூன்றாம் பாவகம்
பொதுவாக 3-ஆம் பாவகம் இளைய சகோதரம்,
காது, பயணம், வீரம்,
வீரியம் எனக் குறிப்பிடும். திருமண வாழ்வு நீடித்து
நிலைக்க 3-ஆம் பாவகத்தின் வீரம், வீரியம்
என இரண்டை எடுத்துக்கொண்டால் போதும். முக்கியமாக ஆண்களுக்கு இது
வீரிய ஸ்தானம். இந்த 3-ஆம் அதிபதி நீசம்,
அஸ்தமனம் அடைந்தாலோ, 6, 8, 12-ல் மறைந்தாலோ,
அம்சத்தில் நீசமடைந்தாலோ, சனி, புதன் வீட்டில் அல்லது அம்சத்தில் அமைந்தாலோ என ஏதாவது ஒருவகையில் வலிமை குன்றியிருந்தால்,
இவ்வகை ஆண்கள், மருத்துவரிடம் ஆலோசனை பெற்று,
அவர் தகுதிச் சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே திருமணம் செய்துகொள்வது நலம்.
மீறித் திருமணம் நடந்தால் திருமண வாழ்வு நீடிக்காது.
பெண்களுக்கு, இதற்கு மாறாக 3-ஆம் அதிபதி உச்சம் பெற்றோ, வலிமையான பாவர் சேர்க்கை பெற்றோ இருந்தால், அந்தப் பெண்கள் சற்று மூர்க்கமாக, கை ஓங்கும் அளவுக்கு நடந்துகொள்வர். இந்தப் பெண்களின் 3-ஆம் அதிபதிக்கான தெய்வத்தை வணங்கும்போது, இவர்களின் அதீத ஆற்றல் குடும்பத் தலைமையேற்றல், கணவரின் தொழில் நிர்வாகத்தில் பங்கு பெறுதல், நிறைய அலுவலகங்களில் தலைமைப் பொறுப்பேற்றல் எனும் நிலை ஏற்பட்டு மேன்மைத் தன்மையில் பயனடையும். அதிக ஆற்றலை நேர்வழியில் திருப்பிவிட முயற்சிக்கவும். மணவாழ்வு ஓஹோதான்.
நான்காம் பாவகம்
பொதுவாக ஜோதிடம் 4-ஆமிடத்தை தாய், வீடு, வாகனம், கல்வி என பலவிதப் பயன்களை எடுத்துரைக்கும். எனினும் திருமணத்தின் நீடித்த வாழ்வினைக் குறிக்கும்போது, சௌக்கியம், சிநேகம், சுகம், வாழும் சூழ்நிலை, பற்று, அந்தரங்க வாழ்க்கை போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். பொதுவாகவே 4-ஆமிடத்தை சுகஸ்தானம் என்றே குறிப்பிடுவர். எனவே இருவரது 4-ஆமிடமும் சுபத்தன்மை பெற்றிருந்தால் திருமண வாழ்வு சௌக்கியமாகச் செல்லும். 4-ஆமிடம் சற்று பலமிழந்தால் கல்யாணக் களை சற்றே குறையும். 4-ஆமிடத்திலுள்ள கிரகங்களும், 4-ஆம் அதிபதியும் திருமண வாழ்வில் எவ்விதம் சுகக்கேடு உண்டாகும்- வாழும் சூழ்நிலைக்கு இடர்ப்பாடு எவ்விதம் ஏற்படும் என உரைப்பர். இதனை திருமணப் பொருத்தம் பார்க்கும் ஜோதிடர்கள் தெளிவுபட உரைத்துவிட்டால் மணமக்கள் மனதளவில் தயாராகிவிடுவர். இதனால் திருமண வாழ்வில் சிறுசிறு சலசலப்பு, பிரச்சினை ஏற்பட்டாலும், ‘நம்ம ஜாதகத்துக்கு இவ்வாறுதான் நடக்கும். எனவே சமாளித்துக் கொள்ளலாம்' என்று மனதளவில் தயாராக இருப்பர். –
நான்காமிடத்தில் அசுபத்தன்மையோடு அமைந்த கிரகப்பலன்கள்
சந்திரன் தாய் விஷயமாக இடர்ப்பாடு.
சூரியன் உடல்நிலை குறைபாடு.
செவ்வாய் சொந்த பூமி இல்லாதவர்.
புதன் கல்வி குறைபாடுள்ளவர், வாழ்வில் பற்றற்றவர்.
சுக்கிரன் வாழ்க்கை வசதிக்குறைவு.
குரு அசையா சொத்து இல்லாதவர்.
சனி வாழ்க்கையில் பற்றில்லாதவர்.
இவ்வாறாக, 4-ஆமிட சம்பந்த கிரகங்கள் வலிமைகுன்றி அல்லது அசுபத்தன்மை பெற்று அமர்ந்திருந்தால், மேற்படி குறைகளால் சுக சௌகர்யம் சற்று பின்னடையும். அவரவர் ஜாதகத்தின்மூலம் இதனைத் தெரிந்துகொண்டு, அதற்குரிய தெய்வத்தை வணங்கினால் இக்குறைகள் மறைவதோடு, மணவாழ்வும் தடையின்றி மலர்ச்சி பெறும்.
ஐந்தாம் பாவகம்
ஜோதிடம் 5-ஆம் பாவகத்தை பூர்வபுண்ணிய ஸ்தானம், குழந்தைகள் ஸ்தானம் என பலவாறாகக் கூறினாலும், ஒரு திருமணத்தின் நீடித்த நிலைப்பாட்டிற்கு- தன் வாழ்க்கைத் துணைமீது கொள்ளும் அன்பு, பாசம், நம்பிக்கை, பெருந்தன்மை, காதல், இனியபொழுதாகக் கழித்தல், ஆரோக்கியமாக இருத்தல், உறவைப் பேணிக்காத்தல் என இவை போன்ற செய்திகளை 5-ஆமிடம் அறிவிக்கும். இந்த 5-ஆமிடம், 5-ஆம் அதிபதி தம்பதிகள் இருவருக்கும் நன்கு அமைந்துவிட்டால், ஒருவருக்கொருவர் காதலுடனும், அன்புடனும் நடந்துகொள்வர். இல்லறப் பிணைப்பு நன்கு இறுகி ஒரு கட்டுக்குள் இருக்கும். இந்த நல்ல புரிதல் இவர்களுக்கு சீக்கிரமே குழந்தை பாக்கியத்தையும் கொடுத்துவிடும். அதுவல்லாது, 5-ஆமிடம் ஒருவருக்கு பலமாகவும், மற்றவருக்கு பலமற்றும் இருப்பின் பாசம், அன்பு எல்லாம் 'ஒன் வே டிராஃபிக்' ஆக அமைந்துவிடும். அடுத்தவரோ, எதிலும் பிடிப்பற்றவராக, அலட்சியமாக நடந்துகொள்வார். அன்பும், பாசமும் நிராகரிக்கப்படும்போது எங்கிருந்து குழந்தை பிறக்கும்? ஒரு திருமண வாழ்வு சிறப்பாக நிலைபெற 5-ஆமிட பலம் மிக அவசியம்.
இந்த கட்டுரை பெரும்பாலும் சின்னஞ்சிறுசுகளுக்கான செய்திதான். தம்பதிகள் அன்யோன்யமாக இருப்பின், அதனை ஊருக்கெல்லாம் தம்பட்டம் அடிக்கக்கூடாது. அன்பு, பாசம் அடக்கமாக இருக்கட்டும். இல்லாவிடில் திருஷ்டி ஏற்பட்டு சண்டை வந்துவிடக்கூடும்.
ஐந்தாமிடத்தில் அசுபத்தன்மையோடு அமைந்த கிரகப் பலன்கள்
சூரியன் ஆரோக்கியக் குறைவு, பருத்த தேகம், அன்பில்லாதவர்.
சந்திரன் நிறைய மனக்குழப்பம் ஏற்படும்.
செவ்வாய் அன்பு, பாசம் எல்லாம் முரட்டுத்தனமாகமுட்டாள்தனமாக இருக்கும்.
புதன் பைத்தியக்காரத்தனமான அன்பு,
சுயநலம்.
குரு தான்' என்கிற ஈகோ நிறைய இருக்கும்.
சுக்கிரன் அனைவரிடமும் அன்பு- அதுவே மைனஸ்.
சனி மனைவியிடம் அன்பு செலுத்தக்கூட சோம்பேறித்தனப்படுவர்.
ஆறாம் பாவகம்
ஜோதிடம் 6-ஆம் பாவகத்தை பொதுவாக நோய், எதிரி, கடன் ஸ்தானம் என்றே கூறும். ஒரு மனிதனுக்கு எவையெல்லாம் கெடுதல் தருமோ, அவற்றையெல்லாம் இந்த 6-ஆம் பாவம் குறிப்பிடும். நீடித்த திருமணத்திற்கும் இது பொருந்தும். திருமணமானவுடன் எல்லாரும் தேனிலவு போகும்போது, சில தம்பதி மட்டும் மருத்துவமனை போனால் நன்றாகவா இருக்கும். அல்லது கல்யாணமானவுடன் கடன்காரன் வந்து நிற்க, 'உன் வளையலை கழட்டித்தா' என்றால் அந்த திருமணம் எங்கிருந்து நிலைக்கும்? இந்தமாதிரி உடல், மனம் சார்ந்த துன்பங்களை 6-ஆமிடம் சுட்டிக்காட்டும். இதே 6-ஆமிடம் வாழ்க்கைத்துணையின் வேலை செய்யும் விதத்தையும் தெரிவிக்கும்.
எனவே, தம்பதிகள் இருவரின் 6-ஆமிடத்தையும் நன்கு ஆய்வுசெய்தல் அவசியம். 6-ஆமிடத்தில் எந்த கிரகம்- அது சுபம், அசுபம் என எதுவாக இருப்பினும், அதன் தசை திருமணமானவுடன் தொடங்குகிறதா என்றும் பார்த்துக்கொள்ள வேண்டும். –
6-ஆமிடம் பாதிப்பு தருவது போல் இருப்பின், அதற்குரிய பரிகாரம் செய்தல் அவசியம். 6-ஆமிடம் என்பது திருட்டுத்தனத்தையும், கஞ்சத்தனத்தையும் கூட குறிப்பிடும். வாழ்க்கைத்துணையின் 6-ஆமிடத்தைக் கொண்டு, அவரின் உள்குத்து வேலைகளை ஓரளவுக்கு முதலிலேயே கண்டுபிடித்து, சுதாரிப்பாக இருக்கலாம்.
ஏழாம் பாவகம்
லக்னாதிபதி, ராசியாதிபதி, லக்னம், ராசி ஆகிய ஏதோ ஒன்றுடன் 7-ஆம் அதிபதி சம்பந்தம் இருத்தல் அவசியம். அது பார்வை, சேர்க்கை , சார சம்பந்தமாகவும் இருக்கலாம். இப்படி இருந்தால்தான் ஒருவருக்குத் திருமணமே ஆகும். 7-ஆமிடம் திருமணம், வியாபாரம், வெளிநாட்டுத் தொடர்பு என பல விஷயங்களைக் கூறினாலும், ஒரு திருமணம் நிறைவாக- நிலையாக இருப்பதற்கு ஒரே காரணம், இவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையிடம் எவ்வாறு நடந்துகொள்வர் என்பதைக் குறிக்குமிடம். ஆக, இந்த 7-ஆமிடம், 7-ஆம் அதிபதியைக்கொண்டு.
ஒருவர் வாழ்க்கைத் துணையிடம் அன்பாக- சமமாக நடந்துகொள்வாராமட்டம் தட்டிக்கொண்டே இருப்பாரா- மதிக்கவே மதிக்காமல் காலில் போட்டு மிதிப்பாரா- அவமரியாதையாக நடத்துவாரா என்றெல்லாம் கண்டுபிடிக்கலாம். ஜாதகத்தை ஆராய்ந்து, ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ, 'உங்களுக்கு வரும் வாழ்க்கைத்துணை சற்று கோளாறான குணமுடையவராக இருப்பார்; நீங்கள்தான் மனதளவில் தயாராக இருக்கவேண்டும்' எனக் கூறிவிட்டால், மணவிலக்கு தவிர்க்கப்பட்டு, மணவாழ்வு நீடிக்கும். 7-ஆமிட சம்பந்தம் பெற்ற எந்த கிரகமானாலும், வலுக்குறைந்திருப்பின் மேற்கண்ட நிலை ஏற்படும்.
எட்டாம் பாவகம்
8-ஆம் பாவகம் எண்ணில்லா விஷயங்களை உரைத்தாலும், தம்பதிகளின் நீண்ட ஆயுளுக்கு முக்கியமான காரணத்தை விளக்கும். அதுவும் பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானம். எனவே இந்த 8-ஆமிடம், 8-ஆம் அதிபதியை நன்கு ஆராய்தல் அவசியம். தம்பதிகளுக்குரிய ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து, அதனதன் பலத்துக்குத் தகுந்த பரிகாரம் செய்துகொள்வது அவசியம். மறுமாங்கல்யம் அணிவது, தாலி தானம், தாம்பூலம் அளிப்பது, அம்பாளை அவ்வில்லாமல் பிரார்த்திப்பது என இவையெல்லாம் திருமண வாழ்வு நீடித்திருக்க உதவும்.
ஒன்பதாம் பாவகம்
9-ஆமிடம் ஜோதிடத்தில் நிறைய காரகங்களைக் கொண்டிருந்தாலும், நீடித்த திருமண பந்தத்திற்கு அதிர்ஷ்டம், நம்பிக்கை, விவேகம், மனத்தெளிவு, பணப்புழக்கம் என ஒரு நிலையான திருமணத்துக்குரிய அம்சங்களை அள்ளித்தருமிடம். 9-ஆம் அதிபதி, 9-ஆமிடம் சுபமாக அமைந்த தம்பதியர்களுக்கு நல்ல மனத்தெளிவும், அதனால் சரியான திட்டமிடலும், அதீத நம்பிக்கையும், அதன்சார் விவேகமும், இவற்றால் ஏற்படும் அதிர்ஷ்டப் பணப்புழக்கமும் உண்டாகும்.
இதுவே 9-ஆமிடம் வலுக்குறைந்த தம்பதிகளுக்கு மனக்குழப்பம் ஏற்படும். அதனால் ஒழுங்காக திட்டமிட இயலாது. இதில் ஏற்படும் மனக்கசப்பில் நம்பிக்கை குறையும். இதனால் அதிர்ஷ்டக் குறைவும் ஏற்படும். இவ்வாறு இருப்பின் அத்திருமணம் எவ்வாறு நீடித்து நிலைக்கும்? எனவே ஜாதகத்தை நன்கு கவனித்து, யாருடைய ஜாதகத்தில் 9-ஆமிடம் வலுக்குன்றியுள்ளதோ, அவர்கள் முக்கியமான விஷயங்களில் தங்கள் இல்வாழ்க்கைத்துணையின் வழிகாட்டுதல்படி நடத்தல் வேண்டும். 'ஈகோவெல்லாம் வேண்டாம். இவ்வாறு விட்டுக்கொடுத்து வாழ்ந்தால், திருமண வாழ்வு அமோகமாக அமையும்.
ஒன்பதாமிடத்தில் அசுபத் தன்மையோடு அமைந்த கிரகப் பலன்கள்
சூரியன் நம்பிக்கையற்றவர், சற்று கோழை.
சந்திரன் தவறாக திட்டமிடுவார்.
செவ்வாய் அதிர்ஷ்ட மற்றவர், கருமி.
புதன் மனக்குழப்பம் உடையவர்.
சுக்கிரன் பணப்புழக்கம் உடையவர்.
குரு சுய பச்சாதாபம் மிகுந்தவர்.
சனி எதிலும் விட்டேத்தியான, பற்றற்ற நிலை.
இவர்களுக்குரிய பரிகாரம் செய்யும்போது அதிர்ஷ்டக்குறைவு குறைந்து, திருமணம் நீடித்து நிலைக்கும். மனநிறைவாகவும் இல்லறம் அமையும்.
பத்தாம் பாவகம்
ஜோதிடத்தில் பெரும்பாலும் ஒருவரின் தொழிலைக் குறிக்கும் பாவகம் இது. நிறைவான இல்லற வாழ்வுக்கு தொழிலும் அவசியத் தேவைதானே? இப்போது ஆண்- பெண் இருவரும் வேலைக்குச் செல்வதால், இக்காலகட்டத்தில், திருமணச் செழிப்பிற்கு 10-ஆம் பாவகம் இன்றியமையாததாகிவிட்டது. இந்த 10-ஆம் பாவகத்தைக் கொண்டு தொழில் மட்டுமல்ல; தம்பதிகளின் கௌரவம், புகழ், ஆசாரமாக இருப்பது, பொறுப்பாக இருப்பது, பெருந்தன்மையாக இருப்பது, தியாக மனப்பான்மை, சுய மரியாதை, சுய கட்டுப்பாடு, தோரணை போன்ற விஷயங்களையும் அறிய முடியும்.
இதன்படி, தம்பதிகளில் ஒருவர் குலவழக்கப்படி ஆசார அனுஷ்டானங்களைப் பின்பற்ற, மற்றவரோ, 'அது கிலோ என்ன விலை?
என்றால் மணவாழ்வின் நிலை என்ன? ஒருவர் மட்டும் தியாக மனப்பான்மையுடன்- பெருந்தன்மையாக நடந்துகொள்ள, மற்றவர் பிச்சைக்காரத்தனமாக, சுயநலமாக நடந்துகொண்டால் மணவாழ்வின் கதி என்ன? இதிலும் மனைவி மட்டும் வேலைக்குச் சென்று, கணவன் வேலைக்குச் செல்லாவிட்டால் கணவருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும். எனவே மணமாகும்போதே ஜாதகங்களை அலசிப்பார்த்து, வாழ்க்கைத்துணை வீண் கௌரவம் பார்ப்பவர் என்றோ, சுயநலமாக இருப்பவர் என்றோ தெரிந்துவிட்டால் அதற்கேற்ப நடவடிக்கைகள் மற்றும் மனத்தயாரிப்புகளை ஏற்படுத்திக்கொள்ளலாம். இதனால் திருமணக் கற்பனைகள் ஒரு எல்லைக்குள் வந்துவிடும்.
பத்தாமிடத்தில்
அசுபத்தன்மையோடு அமைந்த கிரகப்பலன்கள்
சூரியன் தொழில் தடை, அரசு தண்டனை, பாவச் செயல்களில் நாட்டம்.
சந்திரன் தடைகள் நிறைந்த வாழ்க்கை, வேலையில் சோம்பேறித்தனம்.
செவ்வாய் திருட்டுபுத்தி, அதிகாரமற்ற வேலை.
புதன் குறுகிய மனப்பான்மை, மடத்தனம்.
குரு மதநம்பிக்கை குறைந்தவர். காரியத்தடையுண்டு.மரியாதை தெரியாதவர்.
சுக்கிரன் குறை சொல்லி, வாழ்வின் மகிழ்ச்சியைக் குறைப்பார்
.தொழில் மற்றும் வாழ்வில் ஈடுபாடு இருக்காது.
சனி உறுதியற்றவர். ஏற்றத்தாழ்வான வாழ்க்கை
வாழ்க்கைத்துணையின்
10-ஆமிடத்தில் மேற்கண்ட கிரகங்கள் அசுபத்தன்மையுடன் இருப்பின் சிலவற்றுக்குப்
பரிகாரமும், சிலவற்றுக்கு புத்திமதியும், சிலவற்றுக்கு சகிப்புத்தன்மையுடனும் வாழ முயற்சித்தால் திருமண வாழ்வு சுகமே.
பதினொன்றாம் பாவகம்
இதனை ஜோதிடம் லாபஸ்தானம் என்று கூறும். நீடித்த, மகிழ்வான திருமண வாழ்வுக்கு நம்பிக்கை, ஆசைகள், ஊக்கம், உறுதியான இணைப்பு, தன் துணையோடு இணக்கமாக மனமொன்றி வாழ்வாரா அல்லது தனிமை விரும்பியா என பல தகவல்களை 11-ஆம் இடம் கூறும். தம்பதிகளில் யாருக்காவது 11-ஆமிடம் பலம்பெற்றிருப்பின், அவர்கள் தாங்கள் நினைத்ததை அடைந்தே தீருவது என லட்சிய வெறியுடன் இருப்பர். இது நல்ல விஷயங்களுக்கென்றால் சரிதான். ஆனால் எல்லா விஷயங்கள் மற்றும் கெட்ட விஷயங்களுக்கும் இத்தகைய மனப்பாடு இருந்தால் கஷ்டம்தான். யோசித்துப் பாருங்கள்.
வீடு கட்ட வேண்டும்தொழில் விரிவாக்கம் செய்ய வேண்டும் போன்றவையெல்லாம் உயர்ந்த லட்சியங்கள்தான். அவற்றை உழைத்துப் பெறுதல் கௌரவம். ஆனால் திருட்டுத்தனம், குறுக்குவழியில் முறைதவறிச் சென்று லட்சியத்தை அடைவது கேவலம் மட்டுமல்ல; பின்னால் தண்டனைக்கும் வழிவகுக்கும். எனவே வாழ்க்கைத்துணையின் 11-ஆமிடம் நன்கு ஆராயப்பட்டு, மேன்மையான குறிக்கோள் நிறைவேற உதவவேண்டும். மட்டமான குறிக்கோளை சட்டப்புறம்பாக நிறைவேற்றும் நிலையில் வாழ்க்கைத்துணை அமைந்தால், சற்று கடுமையான வழிகளிலாவது திருத்திவிடவேண்டும். மணவாழ்வின் மகிழ்ச்சிக்கு சிலசமயம் கடுமையைப் பயன்படுத்த வேண்டும்.
பன்னிரண்டாம் பாவகம்
பொதுவாக ஜோதிடம் இதனை அயன, சயன ஸ்தானம் என்கிறது. திருமணத்தைப் பொருத்தவரையில் இது சயன ஸ்தானம். மேலும் வெளியூர், வெளிநாட்டுப் பயணத்தையும் குறிக்கும். இந்த 12-ஆம் வீடு சுபத்தன்மையுடன் இருப்பின், அளவான தூக்கமும், அருமையானபயனுள்ள பயணங்களும் அமையும். இதே 12-ஆம் வீடு அசுபத்தன்மையுடன் இருந்தால், ஒன்று தூக்கமே வராது அல்லது எப்போதும் தூங்கிக்கொண்டே இருப்பார். அதுபோல் வீணாக அலைவார். இந்த 12-ஆம் வீடு, அதன் அதிபதியைக் கொண்டுதான் ஜாதகர் எவ்விதம் செலவு செய்வார்- யாருக்கு செலவு செய்வார்- அது அனுமதிக்கத்தக்க செலவுகளா என அறிந்துகொள்ளலாம்... எனவே திருமணத் தம்பதிகள் தங்கள் வாழ்க்கைத்துணையின் 12-ஆமிடத்தைக்கொண்டு போக்குவரத்துகளை அறிந்துகொண்டு, அது தர்மவழி செலவெனில் தகுந்த வழிகாட்டவும், அதர்ம, நெறி தவறிய செலவெனில் அதட்டிக் கேட்கவும் வேண்டும். இவ்வாறு கண்டிப்புடன் இருந்தால் இல்வாழ்வு இனிதாக நீடிக்கும்.
ஏற்கெனவே குறிப்பிட்டபடி, இந்தக் கட்டுரை சின்னஞ்சிறுசுகளுக்குபுதிதாக மணமானவர்களுக்குரியது. வாழ்க்கையென்பது மேடு பள்ளங்கள், முட்கள் நிறைந்துள்ள பாதையைப் போன்றது. அதில் எப்போதும் சிரித்துக்கொண்டும், மகிழ்வோடும் செல்ல இயலாது என்பதை நினைவில் கொள்க. பிரச்சினை இல்லாத நாட்களும் இல்லை; மனிதர்களும் இல்லை. ஒவ்வொரு பாவகமும், ஒவ்வொரு கிரகமும் தினுசு தினுசாகப் பிரச்சினையைக் கொடுக்கத்தான் செய்யும். கூடியமட்டும் கணவன்- மனைவி உட்கார்ந்து பேசி சரிசெய்து கொள்ளவேண்டும். தயவு செய்து, உங்களை பிரச்சினையில் மூன்றாம் மனிதரை அனுமதிக்காதீர்கள்.
கணவனும் மனைவியும் தனியாக இருக்கும்போது, தனியறையில்தானே இருக்கிறார்கள்? பிறகு சண்டை போடும்போது மட்டும் எதற்கு இன்னொரு ஆள்? கூடலின்போது இருவர் மட்டுமே இருப்பதுபோல், ஊடலின் போதும் இருவர் மட்டுமே சமாளித்து தீர்வு காணவேண்டும். அடிக்கவேண்டும் என்றாலும் நான்கு சுவருக்குள் அடித்து, பின்னியெடுத்து (யார், யாயை அடித்தாலும் சரி) பிரச்சினையை சரிசெய்துகொள்ள வேண்டும்.
லக்னாதிபதி என்ற ஜாதகரும், 7-ஆம் அதிபதி என்ற வாழ்க்கைத்துணையும் நேரெதிர் பாவங்கள். திருமணமென்பது லக்ன, 7-ஆம் அதிபதிகளின் இணைவு. எதிரெதிர் பாவங்கள் ஒன்றுசேரும்போது, அவ்வப்போது ஏற்படும் உரசல்களை நீங்களே தீர்த்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் இனிமையாக, நீண்டநெடிய காலமாக, நிறைவாக, வாழ்வாங்கு வாழ முடியும்.
திருமண வாழ்வு தோஷங்களுக்குரிய
பரிகாரத்தலங்கள்
சயன தோஷத்திற்கு தொட்டமள்ளூர்.
கணவன் - மனைவி ஒற்றுமைக்குரிய
தலங்கள்
1. திருக்கூடலூர் ஸ்ரீஜகத்ரட்சகப் பெருமாள்.
2. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்.
3. திருச்சக்தி முற்றம். (கும்பகோணம்).
4. ஸ்ரீரங்கம்.
5. திருச்சாத்த மங்கை.
6. திருமருகல்.
7. திருச்சேறை.
8. ஆச்சாள்புரம்.
திருமணமான தம்பதிகள் அன்புடன், நீண்ட மணவாழ்வு வாழ மேற்கண்ட கோவில்களில் தரிசனம் செய்வதுடன், உங்கள் ஊர்க்கோவில்களில் நடக்கும் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணத்தையும் தரிசனம் செய்யவும். முக்கியமாக அடுத்த வீட்டு கணவன்- மனைவியை வம்பு பேசி பிரிக்காமல் இருக்கவும். இதுதான் சிறப்பான பரிகாரம்.
ஆர். மகாலட்சுமி
Comments
Post a Comment