அவசர முடிவுகள் எடுக்க அருமையான நேரம்!

 

மனிதர்கள் முக்கியமான விஷயங்களை சுப நாட்களில், சுபவேளைகளில் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். சுபநேரத்தில் ஆரம்பிக்கும் எந்த விஷயமும் பூரணமாக- நன்மை தரும்விதத்தில் அமையும் என்பது உண்மை. இதற்காக ஜோதிடர்களைக் கலந்தாலோசித்து, அவர்களின் நட்சத்திரத்திற்குப் பொருந்தும் நாளில் சுப காரியங்களை எடுத்துச் செய்கின்றனர். இதனால் மனத்திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைக்கின்றன. எனினும் இந்த நல்ல நாள், நேரத்திற்காக கொஞ்ச காலம் காத்துக்கொண்டிருக்கத்தான் வேண்டும்.

வாழ்க்கையில், சிற்சில விஷயங்களை இந்த மணியில், இந்த நொடியில், இன்றே செய்துதான் ஆகவேண்டுமென்ற எதிர்பாராத நெருக்கடி தோன்றும். அந்த அவசர நேரத்தில் ஜோதிடரைத் தேடி நல்ல நாள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அவ்வாறு காத்துக்கொண்டிருந்தால் அந்த அருமையான சந்தர்ப்பம் நமக்குக் கிடைக்காமலேயே போய்விடக்கூடும்.

ஒப்பந்தம் போடுவது, அரசு வேலை சம்பந்தமான ஆவணங்களை சமர்ப்பிப்பது, பள்ளி, கல்லூரி நுழைவுத்தேர்வு சம்பந்தம், அரசியல் சந்திப்புகள், முக்கியமான மனிதர் நேர்காணல், பூர்வாங்கப் பேச்சுகள், வெளிநாட்டுப் பயண சம்பந்தம், மதசம்பந்தம் என சில வாழ்வியல் முக்கிய நிகழ்வுகளின்போது நேரம், காலம் பார்க்காமல் இன்றே இதனை முடித்திடல் வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்படும்.

இதில் வேடிக்கை அல்லது துன்பம் என்னவென்றால், முக்கியமான விஷயத்தை முடிக்கவேண்டுமென்று பரபரப்பாக இருக்கும்போது, பஞ்சாங்கத்தைப் பார்த்தால், அன்றைக்கென்று தோஷம் மிகுந்த நாளாக இருக்கும். அது நட்சத்திர தோஷம், யோகக்குறைவு, திதி தோஷம் (அஷ்டமி, நவமி) என ஏதோ ஒரு குற்றமுள்ள நாளாக அமைந்திருக்கும்.

இப்போது இருதலைக் கொள்ளியாக தலைசுற்றிப்போய்விடுவர்.

ஜாதகத்தை, நாளின் சுபத்தன்மையை நம்புவதா அல்லது முக்கியமான நிகழ்வை முடித்துவிடுவதா? ஏதோ ஒன்றைத்தான் பின்பற்றி நடக்க முடியுமென்ற நிலை. நிச்சயம் மனிதராய்ப் பிறந்தவர் அனைவருக்கும் இந்நிலை வந்திருக்கக்கூடும்.

வீட்டின் பெரியவர்கள், சுவாமிக்கு காசுமுடிந்து வைத்துவிட்டு, தெய்வத்தை நன்கு வணங்கிவிட்டு, பின் முக்கியமான விஷயங்களை இருமனதாக செய்யச் சொல்வார்கள். இருப்பினும் தெய்வம் பார்த்துக்கொள்ளும் என நம்பிக்கைத் தருவர்.

இத்தனை களேபாரங்களைத் தரும் ஜோதிடம், அதற்குப் பரிகாரம் கூறியுள்ளதா எனில், ஆம்; மிகச்சிறந்த பரிகாரம் ஒன்றைக் கூறியுள்ளது.

சுபகாரியம் செய்யும் வேளையில், லக்னத்துக்கு 11-ஆமிடத்தில் சந்திரன் அல்லது சூரியன் இருப்பது சகல தோஷ நிவர்த்தி எனக் கூறப்பட்டுள்ளது. இதுவொரு பலமான பரிகாரம் என்கிறது. இதனால் அன்றைய நாளின் நட்சத்திர, திதி, யோக தோஷங்கள் நீங்கிவிடுமாம்.

இதனைப் படித்தவுடன் சிலருக்கு சொல்லொண்ணா கோபம் வரும். 'நாங்களே அவசர அவசரமாக முக்கியமான விஷயமாக அலைந்துகொண்டிருக்கும்போது எங்கிருந்து ஜோதிடரைத் தேடுவது?' என்பார்கள்

ஜோதிடரே தேவையில்லை. இதற்கு ஒரு சிறிய கணக்கு போதும். அதனைச் சொன்னால் எளிதாகப் புரிந்துவிடும்.

லக்னம் கண்டுபிடிக்க சூரியன் எங்கிருக்கிறார் என்று பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு தமிழ் மாதமும் ஒவ்வொரு ராசியில் அமையும். அந்தந்த தமிழ் மாதக்கணக்கில் அந்தந்த ராசியில் சூரியன் அமர்ந்திருப்பார்.

சித்திரை மாதம் சூரியன் மேஷத்திலும், வைகாசி மாதம் ரிஷபத்திலும் அமர்ந்திருப்பார்.

சித்திரை மாதம், சூரிய உதயத்தின்போது மேஷ லக்னம் உதயமாகும். இது இரண்டு மணி நேரம் இருக்கும். அடுத்த இரண்டு மணியில் ரிஷப லக்னம் ஆரம்பிக்கும்.

அதாவது காலை 6.00 மணிக்கு சூரிய உதயம் என்றால் 8.00 மணிவரை மேஷ லக்னம் இருக்கும். அடுத்து 10.00 மணிவரை ரிஷப லக்னம். இவ்வாறு இரண்டு மணிக்கொருமுறை லக்னம் சென்றுகொண்டே இருக்கும்.

இதில் இன்னொரு விஷயம் உண்டு.

தமிழ் மாதப்பிறப்பில், அன்று லகனம் எவ்வளவு நேரம் இருந்ததோ அடுத்த நாள் அதைவிட நான்கு நிமிடம் குறைவாக இருக்கும். மூன்றாம் நாள் மேலும் நான்கு நிமிடம் குறையும். ஒவ்வொரு நாளும் சூரியன், அந்த ராசியைக் கடக்கும்போது லக்ன இருப்பு நேரம் குறைந்துகொண்டே இருக்கும்.

லக்னத்திற்கு 11-ல் சூரியன் அமைய வேண்டுமென்றால், அன்றைக்கு சூரியன் உதித்த ராசிக்கட்டத்திற்கு மூன்றாவது கட்டத்தில் லக்னம் அமைதல் வேண்டும். அதாவது சூரிய உதய லக்னம் + அடுத்த இரண்டு மணி நேரம். 2 + 2 மணி நேரம் கூட்ட வேண்டும். சூரிய உதயம் 6.00 மணியுடன் நான்கு மணியைக் கூட்டினால் 10.00 மணி.

எனவே, 10.00 மணியிலிருந்து லக்னத்திற்கு 11-ல் சூரியன் அமைந்துவிடுவார். எல்லா மாதத்திலும், எல்லா நாட்களிலும் இப்படித்தான் அமையும்.

சூரியன் உள்ள வீட்டிற்கு மூன்றாவது வீட்டில் லக்னம் அமையும்போது அது காலை 10.00 முதல் 12.00 மணிவரை இருக்கும்.

ஆனாலும் சூரிய இருப்பு நேரம், நகர்வு நேரம் குறைந்துகொண்டே வருவதால், 10.00 மணியிலிருந்து 11.00 மணிவரையிலுள்ள நேரம், தோஷம் நீக்கும் நேரமாகக் கூறப்பட்டுள்ளது.

லக்னத்துக்கு 11-ல் அமையும் சந்திரனும் இதே போல சகல தோஷங்களையும் போக்குவார் எனக் கூறப்பட்டுள்ளது.

பகலில் லக்னத்துக்கு 11-ல் சூரியன் அமர்வது பலமென்றும், இரவில் லக்னத்துக்கு  11-ல் சந்திரன் அமர்வது பலமென்றும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் சுபகாரியங்கள் செய்தால் எந்த தோஷமும் அண்டாது என்பர். இதை அவசர வேலைகளுக்கு மட்டும் வருடம் முழுவதும் எல்லா நாட்களிலும் பயன்படுத்தலாம்.

எனவே, அவசர, அவசிய விஷயங்களை காலை 10.00 மணிமுதல்   

11.00 மணிவரையிலான நேரத்தில் எந்த மனத்தடையுமின்றி செய்யலாம்.

ஜோதிடம் ஆயிரக்கணக்கான தோஷங்களைக் கூறியுள்ளது. ஆயினும் தெய்வமும், தெய்வ ரிஷிகளும் மனிதர்கள் மீதுள்ள பெருங்கருணையால், அதற்குரிய தோஷ நிவர்த்தியையும் கூறியருளியிருக்கிறார்கள்.

குறிப்பு: திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்குக் கண்டிப்பாக ஜோதிடரைக் கலந்து தேதி குறிக்கவும்.

ஆர். மகாலட்சுமி

Comments